தலைவி படத்தையடுத்து, சீதா படத்தில் சீதாவாக நடிகை கங்கனா ரணவத் நடிக்கவுள்ளார்.
இராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்தியிலும் இராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது.
சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால், இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை தங்கல் படம் மூலம் பிரபலமான நிதிஷ் திவாரி, மாம் படத்தை இயக்கிய ரவி உடையார் ஆகியோர் இணைந்து இயக்குகிறார்கள்.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகவுள்ளது. இப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரை அணுகினர். அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதால், தற்போது அவருக்கு பதில் நடிகை கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்துக்கு விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதியுள்ளார்.